

புதுதில்லி: அதிமுகவின் 11 எம்.எல் ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கினை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் செம்மலையின் மனு நவம்பர் 13-இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடபப்டி பழனிசாமி அரசு மீது கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப் பேரவையில் நமபிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்பொழுது அதிமுகவில் தனி அணியாக செயல்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான 11 அதிமுக எம்.எல் ஏக்கள், கட்சிக் கொறடாவின் உத்தரவையும் மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அந்த 11 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்று குற்றம் சாட்டிய திமுக, அதிமுகவின் 11 எம்.எல் ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
ஆனால் ஆந்திர சட்டப்பேரவை தொடர்பான இதே போன்றதொரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதால், இந்த வழக்கினையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி, அதிமுக தலைவர் செம்மலை வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி செல்லமேஸ்வர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகியின் வேண்டுகோளினை ஏற்று, நவம்பர் 13 அன்று விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.