புதுதில்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தினைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 5-க்குள் துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பெறும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை வழக்கு தொடுத்தது. இதில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் நீதின்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனுக்களை தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்தது.
அதன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் சுகேஷ் சந்திரசேகர் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது. தினகரன் பெயர் இடம் பெறவில்லை. இதன் காரணமாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில், டிசம்பர் 5-க்குள் துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.