

தில்லியில் காற்று மாசு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளதால், 2020 - ம் ஆண்டு அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த யுரோ - 6 ரக பெட்ரோல், டீசலை அடுத்த ஆண்டே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் தற்போது யுரோ - 4 ரக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை 2020-ஆம் ஆண்டு யுரோ - 6 தரத்துக்கு உயர்த்துவது என மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவித்தது.
இந்நிலையில் தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் தேசிய தலைநகர் தில்லியில் மட்டும் யுரோ -6 ரக பெட்ரோல், டீசல் பயன்பாட்டை முன்கூட்டியே மல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தில்லி மற்றும் அதன் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மாசு குறையும். பிற இடங்களில் யுரோ - 6 ரக பெட்ரோல், டீசல் பயன்பாடு முன்பு அறிவிக்கப்பட்ட தேதியிலேயே அமலுக்கு வரும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஜியாபாத், நொய்டா, குருகிராம், ஃபரீதாபாத் பகுதி பெட்ரோல் விற்பனை நிலையங்களும் 2019, ஏப்ரல் 1-ம் தேதி முதல் யுரோ -6 ரக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் நடவடிக்கைகளை ஆராய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
2016-17 - ஆம் ஆண்டில் தில்லியில் 906,000 டன் பெட்ரோல், 10.26 லட்சம் டன் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.