ராம்பூர்: தங்களது கிராமத்தினைச் சேர்ந்த பெண்ணைச் சீண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரைத் தாக்கி, ஊராரின் சிறுநீரினைக் குடிக்க வைத்து தண்டனை வழங்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நீ திமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தினைச் சேர்ந்த லஷ்கர் கஞ்ச் கிராமத்தில்தான் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடீ ராம் சிங் என்ற அந்த இளைஞரை, அந்த ஊரில் உள்ள பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரிக்கும் பொருட்டு அவரைச் சூழ்ந்த பெண்கள் உள்ளிட்ட கிராமத்தார் சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். தங்கள் கையில் வைத்திருந்த துடைப்பம், தடி ஆகியவற்றைக் கொண்டு சரமாரியாக அவரைத் தாக்கியுள்ளனர். மேலும் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று முகத்தில் கருப்பு மை பூசியவர்கள், செருப்பு மாலையும் போட்டுள்ளனர். விட்டு விடுமாறு கெஞ்சிய அவரது வேண்டுகோளினை அவர்கள் காதில் வாங்கவே இல்லை.
உச்ச கட்டமாக அவரை அடித்து ஊராரின் சிறுநீரைக் குடிக்க வைத்துள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற ராம் சிங்கின் உறவினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் ராம் சிங்கை ஒருவழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போலீசுக்கு தகவ்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வந்த போலீசார் அவரிடம் இருந்து புகாரினைப் பெற மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக நீதிமன்றத்தினை அணுகிய ராம் சிங் தன்னைத் தாக்கியவர்கள் மீது வழக்கு தொடுக்க உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார். பின்னர் நீதிபதி தர்கேஸ்வரி யாதவ் இட்ட உத்தரவில் ராம் சிங்கினைத் தாக்கிய 26 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.