

வளர்ச்சி குறித்து பாஜக தலைவர்களுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சவால் விடுத்துள்ளார். தன்னுடன் விவாதம் நடத்த பயந்து பாஜகவினர் ஓடிஒளிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பினராயி விஜயன் மாநில வளர்ச்சி குறித்து விவாதம் நடத்தத் தயாராக இருந்தால், அதனை வரவேற்பேன் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தனது முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் பினராயி விஜயன், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கேரளத்துக்கான திட்டப் பணிகளை நிறைவேற்றுவது, அவற்றுக்கான நிதியை ஒதுக்குவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு மாநில நலன்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உரிய நிதியைப் பெறவும் கேரள மாநில இடதுசாரிக் கூட்டணி அரசு முயற்சித்து வருகிறது.
கேரள மாநில வளர்ச்சி குறித்து விவாதிக்க பிரதமர் மோடியிடம் பல முறை நேரம் ஒதுக்கக் கோரிக்கை விடுத்துவிட்டேன். ஆனால், அவர் நேரம் ஒதுக்க மறுத்து வருகிறார். கேரள மாநில பாஜகவினர், மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசிடம் ஏற்படுத்தியுள்ள பகையுணர்வுதான் இதற்குக் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.
மாநிலத்தில் அரசியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.