தலைநகர் தில்லியில் தினந்தோறும் காற்றில் மாசு அளவு அதிகரித்து வருகிறது. மனிதர்கள் சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக, தீபாவளித் திருநாளில் தில்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் மாசு அளவு மேலும் கூடும் என்று அச்சம் தெரிவித்தனர். இருப்பினும் ஆங்காங்கே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.
இந்நிலையில், தீபாவளியின் காரணமாக காற்றில் மாசு அளவு அதிகரிக்கவில்லை என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை காரணமாக எங்கும் புகை மண்டலம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை காற்றில் மாசு அளவு குறைந்தே காணப்பட்டது. பட்டாசு காரணமாக எவ்வித பாதிப்பும் தில்லியில் ஏற்படவில்லை.
இம்முறை, இதுபோன்று மாசு ஏற்படுத்தாத வகையிலான பட்டாசுகள் அதிகளவில் விற்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தில்லியில் தினந்தோறும் ஏற்பட்டு வரும் காற்றில் மாசு அளவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.