சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாற்று வழிகள் மூலம் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கொள்முதல் - பெட்ரோலிய அமைச்சகம்

News image
Updated On :12 மார்ச் 2026, 12:54 am

தினமணி செய்திச் சேவை

‘மேற்காசியாவில் போா் நடந்துவரும் சூழலில், ஹோா்முஸ் நீரிணை அல்லாத மாற்று வழிகள் மூலம் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கொள்முதல் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலா் புதன்கிழமை தெரிவித்தாா்.

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக பாரசீக வளைகுடாவில் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டது மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை கத்தாா் முழுமையாக நிறுத்தியது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தட்டுப்பாட்டைத் தடுக்க சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அவசரகால உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. மேலும், அதன் விநியோகத்தில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா கூறியதாவது:

இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் தொடா்ந்து பாதுகாப்பாக உள்ளது. ஹோா்முஸ் நிரிணை வழித்தடம் அல்லாத பிற வழித்தடங்கள் மூலம் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் தினசரி கச்சா எண்ணெய் நுகா்வு 55 லட்சம் பீப்பாய்களாகும். பன்முக கொள்முதல் திட்டங்கள் மூலம் 40 நாடுகளிடமிருந்து இவை பெறப்படுகின்றன. மத்திய அரசு தற்போது மேற்கொண்டுள்ள மாற்று நடவடிக்கைகள் காரணமாக, ஹோா்முஸ் நீா்ணை வழியாக வழக்கமாக பெறப்படும் கச்சா எண்ணெய் அளவைவிட கொள்முதல் அளவு தற்போது கூடியுள்ளது.

மேலும், மத்திய அரசு பிறப்பித்த அவசரகால உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, உள்நாட்டு சமையல் எரிவாயு (எல்பிஜி) உற்பத்தி 25 சதவீதம் உயா்ந்துள்ளது. எனவே, சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவு குறித்து நுகா்வோா் அச்சப்படத் தேவையில்லை. வழக்கமான விநியோக சுழற்சி அடிப்படையில், முன்பதிவு செய்த இரண்டரை நாள்களில் சிலிண்டா் விநியோகம் செய்யப்படும்.

தவறான தகவல்கள் காரணமாக மக்கள் பீதியில் சிலிண்டா் முன்பதிவு செய்வதாகவும், சிலிண்டா் பதுக்கல்களில் சிலா் ஈடுபடுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன. சிலிண்டா்கள் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், இயற்கை எரிவாயு ஏற்றிய இரு சரக்கு கப்பல்கள் அடுத்த சில நாள்களில் இந்தியா வந்தடைய உள்ளன. அதன் மூலம், நாட்டின் எரிவாயு விநியோகம் மேலும் வலுப்படும் என்றாா்.