சரக்கு-சேவை வரி விதிப்பை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அவசரகதியில் அமல்படுத்தியுள்ளது பொருளாதாரத்தை பாதிக்கும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
தனியார் செய்தித் தொலைகாட்சி சேனலுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் கூறியதாவது:
மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, அவசரகதியில் அமல்படுத்திய ஜிஎஸ்டி ஆகிய இரண்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமாக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனெனில், இந்த இரு நடவடிக்கைகளுமே அமைப்புசாரா தொழில்களையும், தொழிலாளர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.
அதேபோல நாட்டில் ஏராளமான மக்கள் சார்ந்துள்ள சிறு தொழில்களையும் இந்த இரு நடவடிக்கைகளும் பாதித்துள்ளன.
ஜிஎஸ்டியை முறையாக அமல்படுத்தாமல் அவசர கதியில் மத்திய அரசு அமல்படுத்திவிட்டது.
இதனால் பல்வேறு துறைகளில் எதிர்பாராத சுணக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.
இவை அனைத்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.
முன்னதாக, கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மன்மோகன் சிங், 'ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அரசு நிர்வாகத்தின் மிகப்பெரிய தோல்வி. சட்டரீதியாக நிகழ்த்தப்பட்ட மாபெரும் தவறு, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை. இதனால் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் அளவுக்கு குறையும்' என்று கருத்து கூறியிருந்தார்.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதமாகக் குறைந்தது. எனினும், ஜிஎஸ்டி அமலாவதை முன்னிட்டு பலரும் சரக்குகளை முன்னதாக சந்தைக்கு அனுப்பியதுதான் பொருளாதார வளர்ச்சி குறையக் காரணம் என்று மத்திய அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.