4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பங்குச்சந்தை: 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு நிஃப்டி சரிவு! சென்செக்ஸ் 1,342 புள்ளிகள் குறைந்தது!

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவு...

News image
கோப்புப் படம்
Updated On :11 மார்ச் 2026, 12:19 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில், கச்சா எண்ணெய் விலை இன்று மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் இன்று மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளன.

கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு நிஃப்டி இன்று கடும் சரிவைச் சந்தித்து 24,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்றது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் இன்று கிட்டத்தட்ட 2 சதவீதம் சரிந்து முடிவடைந்தன.

தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டுப் பங்குகள் மற்றும் புளூ-சிப் வங்கிப் பங்குகளில் ஏற்பட்ட தொடர் விற்பனையும் இன்றைய பங்குச் சந்தை சரிவிற்கு காரணமாக அமைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,446.72 புள்ளிகள் சரிந்து 76,759.26 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,342.27 புள்ளிகள் சரிந்து 76,863.71 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 394.75 புள்ளிகள் சரிந்து 23,866.85 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, டிரென்ட், பாரதி ஏர்டெல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் சரிந்தும், மறுபுறம் சன் பார்மா மற்றும் என்டிபிசி பங்குகள் உயர்ந்தும் காணப்பட்டன.

நிஃப்டி-யில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் என்டிபிசி, ஜியோ ஃபைனான்சியல், கோல் இந்தியா, சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் வணிகமாகின.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.2% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.36% சரிந்தது.

மன்னூரில் 40,000 சதுர அடி அளவில் கிடங்கு வசதியை அமைப்பதில் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் முனைப்பு காட்டி வரும் நிலையில் அதன் பங்குகள் 2.5% அதிகரித்தன. ரூ. 401.33 கோடி மதிப்புள்ள பேக்கிங் ஆர்டரை பெற்றதையடுத்து எச்.ஜி. இன்ஃப்ரா இன்ஜினியரிங் பங்குகள் 6% உயர்ந்தன.

தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.4,672.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 6,333.26 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 1.43 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி 1.40 சதவீதமும் உயர்ந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்த நிலையில், ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு சரிந்து முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தை சரிவில் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலையாக முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், 5.76 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 92.86 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.