புதுதில்லி: மியான்மர் எல்லையில் முகாம் அமைத்துள்ள நாகாலாந்து விடுதலை இயக்க ஆதரவு தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் இன்று அதிகாலை எல்லை தாண்டி 'துல்லிய தாக்குதல்' நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மியான்மர் எல்லையில் அடர்ந்த வனங்கள் மற்றும் ஆறுகள் உள்ளன. இதனைப் பயன்படுத்தி அங்கு சில தீவிரவாத ஆதரவுக் குழுக்கள் முகாமிட்டுள்ளன. அவர்களில் நாகாலாந்தில் இருந்து செயல்படும் என்.எஸ்.சி.என் அடிப்படைவாத குழுவுக்கு ஆதரவான தீவிரவாத குழுக்களும் முகாம் அமைத்துள்ளன.
சமீபத்தில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த ரோஹிங்யா இஸ்லாமியர்களுடன் இவர்களும் இணைந்து உள்ளே வந்து குழப்பங்களை உண்டாக்குவதாக உளவுத்துறை அறிக்கை தந்திருந்தது. அதன் பேரில் இத்தகைய முகாம்கள் மீது இந்திய ராணுவம் இன்று அதிகாலை எல்லை தாண்டி 'துல்லிய தாக்குதல்' நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலை 04.30 மணி அளவில் விமானத்தில் இருந்து 'பாரா ஜம்பர்ஸ்' எனப்படும் படையணியைச் சேர்ந்த 70 வீரர்கள் எல்லையில் இறக்கி விடப்பட்டனர். எல்லையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவி அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் அதிக அளவில் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள் அனைவரும் எந்த விதமான சேதமும் இல்லமல் தங்கள் தளத்துக்கு திரும்பி உள்ளனர். இந்த துல்லிய தாக்குதல் தொடர்பான பிற விபரங்கள் இந்திய ராணுவத்தின் கிழக்கு தலைமையகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பபடுமென்று தெரிகிறது.