புதுதில்லி: ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை மீட்க மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஈராக் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஈராக்கின் மொசூல் நகரை கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். மருத்துவமனை கட்டுமான பணிக்காக இந்தியாவின் பஞ்சாப், இமாசலபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து அங்கு சென்றிருந்த 40 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்களின் கதி என்ன ஆனது என்பது உடனடியாக தெரிய வரவில்லை. அப்போதே, இறந்து விட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இந்த சூழலில் கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ”ஈராக்கில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன் ஈராக்கில் பலியான 39 இந்தியர்களின் உடல்கள் ஒரு வாரத்தில் இந்தியா கொண்டு வரப்படும் என்று சுஷ்மா சுவராஜ் உறுதியளித்தார். மேலும் மத்திய அமைச்சர் விகே சிங், ஈராக் சென்று இதற்கான அனைத்து பணிகளையும் கண்காணிக்க உள்ளதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை மீட்க மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஈராக் புறப்பட்டுச் சென்றுள்ளார்.