மத்தியப் பிரதேசத்தில் இணையமைச்சர் அந்தஸ்து பெற்ற சாதுக்கள், முதல்வரை மிரட்டி பதவியைப் பெற்றிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில பாரதிய அகாதா பரிஷத் தலைவர் மஹத் நரேந்திர கிரி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு நர்மதை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நதிக் கரையோரம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. மாநில அரசு நடைமுறைப்படுத்தி வரும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக போராட்டம் நடத்தப் போவதாக சாதுக்கள் நர்மதானந்த மகராஜ், ஹரிஹரானந்த் மகராஜ், கம்ப்யூட்டர் பாபா, பையு மகராஜ், பண்டிட் யோகேந்திர மஹந்த் ஆகியோர் அறிவித்தனர்.
இந்நிலையில், நர்மதை நதி பாதுகாப்புக்காக ஒரு குழுவை மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் திடீரென அறிவித்தார். அதன் உறுப்பினர்களாக அந்த 5 சாதுக்களும் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்களுக்கு இணையச்சர் அந்தஸ்தும் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் தங்கள் போராட்டத்தையும் கைவிட்டனர்.
இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக முதல்வரை மிரட்டி பதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிûலையில், சாதுக்களின் முக்கியமான தலைமை அமைப்பான அகில பாரதிய அகாதா பரிஷத் தலைவர் மஹத் நரேந்திர கிரி இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி மூலம் கூறியதாவது:
சாதுக்கல் யாரும் மிரட்டி பதவியைப் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இணையமைச்சர் அந்தஸ்து பெற்றுள்ள 5 சாதுக்களும் எங்கள் அதிகார வரம்புக்குள் வரும் சாதுக்கள் அமைப்பில் இடம் பெற்றிருந்தால், விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலில் முறைகேடு புகார் கூறி போராட்டத்தை அறிவித்த சாதுக்கள், பதவி கிடைத்த பின்னர் முறைகேடு நடைபெறவில்லை என்று கூறியிருப்பது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
மேலும், முதல்வர் யாருடைய மிரட்டல்களுக்கும் அச்ச வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









