

காஷ்மீரில் சிறுமி வன்கொடுமை வழக்கு விசாரணை தொடர்பாக விரைவு நீதிமன்றம் அமைக்க அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை கோரிக்கை வைத்தார்.
காஷ்மீர் மாநிலம் கதுவா எனுமிடத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி ஐனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மேலும், இனியும் இதுபோன்ற வன்கொடுமை நிகழாமல் இருக்க தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் பொதுமக்களிடம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், சிறுமி வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்குமாறு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, அம்மாநில தலைமை நீதிபதி ராமலிங்கம் சுதாகரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கு விசாரணையை 90 நாட்களுக்குள் முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, சிறுமி வன்கொடுமை தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு காஷ்மீர் அரசு மரண தண்டனை விதிக்க புது சட்டம் ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாடு முழுவதுக்கும் இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.