கதுவா வழக்கு: ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கதுவா வழக்கு: ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா என்ற மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி அச்சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித் மனுவில், தங்களின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறும், இவ்வழக்கு விசாரணையை ஜம்மு-காஷ்மீரில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் சிறுமியின் தந்தை தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்த வழக்கு விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. அங்கு ஒரு தரப்பு சார்புள்ள நிலைமை நிலவுகிறது. அதுபோல இதில் சம்பந்தப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை மாநில காவல்துறை திறம்பட செய்துள்ளது. கிடைத்த ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக வாதிட்டார்.

இதையடுத்து சிறுமியின் குடும்பத்துக்கும், அவர்கள் தரப்பு ஆலோசகர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விளக்கம் கேட்டு அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com