
புதுதில்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தினை கைது செய்வதற்கான தடையை மே 2 -ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் பண மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன், ஏப்ரல் 16 ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் 27-ம் தேதி விசாரணைக்கு வருவதால் அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். எனவே 27-ஆம் தேதி அவரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.