மும்பை: உடல்நலக் குறைபாடின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தாஹிர் மெர்ச்சண்ட் மரணமடைந்தார்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த கொடூர சம்பவத்தில் 254 பேர் உயிரிழந்தனர். 713 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் ரூ.27 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன.
இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு நிதி வசதி செய்து கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான தாஹிர் மெர்சண்ட் என்ற தாஹிர் டக்லா அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டு, கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். அவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் உடல்நலக் குறைபாடின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாஹிர் மெர்ச்சண்ட் புதன் காலை மரணமடைந்தார்.
நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர் சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. புதனனன்று அதிகாலை 3.45 மணியளவில் சிகிச்சை பலனன்றி அவர் மரணம் அடைந்து விட்டார்.