புதுதில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பதவி நீக்கத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பேட்டியளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் பதவி நீக்கம் தொடர்பான நோட்டீஸை அளித்தன.
அந்த நோட்டீஸில் காங்கிரஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 64 எம்.பி.க்களும், முன்னாள் எம்.பி.க்கள் 7 பேரும் கையெழுத்திட்டனர்.
நோட்டீஸ் குறித்து, மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் காஷ்யப், முன்னாள் சட்டத் துறை செயலர் பி.கே. மல்கோத்ரா ஆகியோருடன் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை பேசினார். மேலும் மாநிலங்களவை செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுடனும் நாயுடு ஆலோசனை நடத்தினார். அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே. பராசரன் ஆகியோருடனும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸ் குறித்து வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை வெங்கய்ய நாயுடு சந்தித்து பேசவும் வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியிருந்தனர். ஆனால் இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது எதிர்க்கட்சிகள் அளித்துள்ள பதவி நீக்க தீர்மான நோட்டீஸை நிராகரித்துள்ளதாக வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.
இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதாலேயே, எதிர்க்கட்சிகள் அளித்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே எதிர்க்கட்சித் தலைவர்கள் நோட்டீஸ் அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பதவி நீக்கத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் திங்களன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது எதிர்க்கட்சிகள் அளித்துள்ள பதவி நீக்க தீர்மான நோட்டீஸை நிராகரித்தது தொடர்பாக, வெங்கய்ய நாயுடு உரிய விளக்கமளிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் நோட்டீசை அரசியல் சாசன சட்டப் பிரிவு 124-ன் படி ஏற்றுக் கொள்ள இடமுண்டு.
64 எம்.பிக்களின் உணர்வுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
நோட்டீசை நிராகரிப்பதற்கு முன்னால் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துடன் வெங்கய்ய நாயுடு ஆலோசனை செய்திருக்கலாம்.
அதேபோல மிகவும் அவசரமாக நோட்டீஸ் நிராகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே பதவி நீக்கத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்குத் தொடர உள்ளோம்.
இவ்வாறு கபில்சிபல் தெரிவித்தார்.