பைரியா (உ.பி): காங்கிரஸ் ராவணன் போலவும், மம்தா பானர்ஜி சூர்ப்பனகையாகவும் இருக்கிறார்கள் என்ற உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பைரியா தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் சுரேந்திரா சிங். அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். சமீபத்தில் கூட உன்னோ தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ செங்கர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் இவர் கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் ராவணன் போலவும், மம்தா பானர்ஜி சூர்ப்பனகையாகவும் இருக்கிறார்கள் என்ற இவரின் சமீபத்திய பேச்சால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
பைரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
மம்தா பானர்ஜி சூர்ப்பனகை போன்று செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து மக்கள் தெருக்களில் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு முதல்வர் எதுவும் செய்யாமல் இருக்கிறார். இத்தகைய தலைவர்கள் நல்லவர்கள் இல்லை. வங்காளத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இல்லை.
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில் வங்காளம் மற்றுமொரு ஜம்மு மற்றும் காஷ்மீர் போல் ஆகி விடும். அங்கு இந்துக்கள் வெளியற்றப்பட்டது போல இங்கும் வெளியேற்றப்படுவார்கள். காங்கிரஸ் இந்த தருணத்தில் இராவணன் போன்று செயல் பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்புதான் பாஜக தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதையும், ஆர்வக்கோளாறில் கருத்துகள் கூறுவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காக ஊடகங்களை நாம் குறை கூறக்கூடாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.