224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24-ஆம் தேதி ஆகும். மேலும் வேட்புமனு திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 27-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்பட்டு வந்தன. பொது தொகுதிகளுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் தனி தொகுதிகளுக்கு ரூ.5 ஆயிரம் டெபாசிட் தொகை நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 2,655 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
224 தொகுதிகளில் பாஜக-வும், 222 இடங்களில் காங்கிரஸும், ஜேடிஎஸ் கட்சி 201 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள முல்பாகல் தொகுதியில் அதிகபட்சமாக 39 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். சித்திரதுர்கா மாவடத்தில் உள்ள சல்லகேரே தொகுதியில் குறைந்தபட்சமாக 4 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 ஆயிரத்து 436 ஆண் வாக்காளர்களும், 219 பெண் வாக்காளர்களும் களத்தில் உள்ளனர். அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் இருந்து 800 வேட்பாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2 ஆயிரத்து 655 வேட்பாளர்கள் களமிறங்கும் இந்த தேர்தலில் 1,155 வேட்பாளர்கள் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர் என்று தெரிவித்திருந்தது.