ஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்ப மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேர், ஈரானில் கடந்த 6 மாதங்களாக மீனவர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் தராமல் மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்களின் உரிமையாளர், அவர்களின் அடையாளஅட்டைகள், கடவுச்சீட்டுகள் ஆகியவற்றை திருப்பித் தராமல் வைத்திருந்தது தெரியவந்தது.
எனவே அவர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஈரானில் வாடும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த 21 மீனவர்களும் பாதுகாப்பாக இந்தியா திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார்.
இந்நிலையில், அந்த 21 மீனவர்களும் அங்கிருந்து இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்கிழமை மேற்கொண்டார். ஆகஸ்டு 3-ஆம் தேதி முதல் இவர்கள் குழுக்களாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
ஈரானில் சிக்கி தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களும் நாடு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவரும் ஆகஸ்டு 3-ஆம் தேதி முதல் குழுக்களாக சென்னை திரும்புவார்கள் என்றிருந்தது.