மகாராஷ்டிரத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராடி வரும் மராத்தா சமூகத்தினருக்கு சட்ட ஆய்வுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடு வழங்க அரசு தயாராக இருப்பதாக மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மராத்தா சமூகத்தினரைச் சேர்ந்த 22 முக்கிய தலைவர்களை 3 மணி நேரத்துக்கும் மேலாக சந்தித்துப் பேசிய ஃபட்னவீஸ், பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்தச் சந்திப்பானது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைவரின் கருத்துகளையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அரசு தரப்பில் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், போராட்டங்களின் போது ஏற்படும் கலவரங்களைத் தடுக்க வேண்டுமென சமூகத்தினரிடம் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இட ஒதுக்கீடு தொடர்பாக கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
18 மராத்தா சமூகத்தினர் கைது: போராட்டங்களின் போது கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 18 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் கூறியதாவது:
கடந்த மாதம் 25-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து, ரோஹன் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பான குற்றவாளிகள் கோவா மாநிலத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அவர்களைப் பிடிக்க கோவா காவல் துறையினரின் உதவி நாடப்பட்டு, குற்றவாளிகளின் புகைப்படங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கோவா காவல் துறையினர் வியாழக்கிழமை 3 நபர்களை கலங்குடே கடற்கரையில் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









