

புது தில்லி: வரவிருக்கும் 2019 மக்களவைத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைதான் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 2000 ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த முறையில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும், அதன்மீது நம்பகத்தன்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.
அதிலும் குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு நாடுமுழுவதும் நடைபெற்ற பல்வேறு மாநிலத் தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் வரவிருக்கும் 2019 மக்களவைத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைதான் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் உள்ளிட்ட 17 கட்சிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்துவதாகத் தெரிகிறது. அதன்படி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைதான் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைக்க இந்த கட்சிகள் முடிவு செய்துள்ளன. அத்துடன் இதுதொடர்பாக விரைவில் நேரடியாக ஆணையத்துக்குச் சென்று கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் தில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.