பிரதமர் நரேந்திர மோடிக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி பல இடங்களுக்குச் சென்றுள்ளார். அங்கு பலதரப்பட்ட உடைகளையும், தொப்பிகளையும் அணிந்துள்ளார். ஆனால் அவர் இதுவரை முஸ்லிம்களின் உடைகளை அல்லது தொப்பிகளை அணிந்தது கிடையாது. ஏனென்றால் அவருக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது. அவர்களிடம் வேறுபாடு காட்டுபவர்.
அவர் தன்னை அனைவருக்குமானவர் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வருகிறார். அதுபோல பிரதமர் என்பவர் இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவாக தான் இருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியால் அவ்வாறு செயல்பட முடியாது. அவர் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக மட்டும் தான் செயல்படுகிறார். இதில் அவரது நிலைப்பாடு குறித்து எதைக் கூறமுடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இவை அனைத்தும் நான் வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்த கூறிய கருத்துக்கள் கிடையாது. இவையெல்லாம் இதுநாள் வரை நான் கவனித்து வந்தது. இவைகளுக்கான பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் என்றார்.