

ஹூப்ளி: கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தைத் தொடங்கி வைத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, விவகாரத்துக் கோரியிருந்த தம்பதியிடம் பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைத்துள்ளார்.
ஹூப்ளியில் கட்டப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, முதல் நாளன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தையும் துவக்கி வைத்தார்.
அப்போது, விவகாரத்துக் கோரியிருந்த ஒரு தம்பதியினர், நீதிபதி தீபக் மிஸ்ராவின் அறிவுரையை ஏற்று அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டனர். இதனால் தாங்கள் பிரியப் போகிறோம் என்ற கவலையில் இருந்த அந்த தம்பதியின் 4 பிள்ளைகளும், நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
விவகாரத்துக் கோரியிருந்த தம்பதிக்கு கடந்த 2000ஆவது ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015ம் ஆண்டு விவகாரத்து கோரியிருந்தனர். இந்த மனு மீது சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தம்பதி மற்றும் அவரது பிள்ளைகளுடன் பேசிய தீபக் மிஸ்ரா, விவகாரத்தால் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் அது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிப்பது குறித்து எடுத்துரைத்தார்.
அவர் பேசியதாவது, குடும்ப முறைகள் பலவீனமடைந்துவிட்டால் அது சமுதாயத்தை பாதிக்கும். விவாகரத்துப் பெறும் யோசனையைக் கைவிட்டு, குடும்பத்தை எப்படி ஒன்றாக நடத்துவது என்று யோசியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டுங்கள் என்று தம்பதியை வலியுறுத்தினார்.
நீதிபதியின் யோசனையை தம்பதியர் ஏற்றுக் கொண்டு சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்தனர். தீபக் மிஸ்ரா அளித்த இனிப்புகளையும் குடும்பத்தோடு பகிர்ந்து சாப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.