ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகரான ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றியதால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் மையப்பகுதியில் லால் சவுக் வியாபாரத் தலம் அமைந்துள்ளது. அங்குள்ள கண்டா கர் பகுதியில் மணிக்கூண்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மணிக்கூண்டின் அருகில் செவ்வாய் மாலை இளைஞர்கள் சிலர் ஒன்று கூடினர். அவர்களில் ஒருவர் இந்திய தேசியக் கொடியினை ஏற்றியுள்ளார். அதற்கு அங்கு இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் அது கைகலப்பாக மாறி கொடி ஏற்றிய இளைஞர் தாக்கப்பட்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கும்பல் தாக்குதலிலிருந்து இளைஞரை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.