மக்களிடம் சென்று மோடி அரசுக்கு எதிரான மனப்பான்மையை உருவாக்குங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை அறிவுறுத்தியுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக வெற்றி பெற ராகுல் தலைமையிலான காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதேபோன்று சனிக்கிழமை மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ராகுல் காந்தி பேசியதை பகிர்ந்துகொண்டார். அதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது,
"மோடி அரசின் ஊழல்களை பிரச்சாரம் மூலம் பூத், மாவட்டம், மாநிலம் என அனைத்து தரப்புகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். மோடி அரசின் ஊழலுக்கு ரஃபேல் விவகாரம் சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு தனியார் நிறுவனத்தின் 1 லட்சம் கோடி ரூபாய் லாபத்துக்காக அரசுக்கு ரூ. 40,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் செயலாகும். மக்களிடம் நாம் செல்லாவிட்டால், வேறு யார் செல்வார்கள்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள், அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள், செயலாளர்கள் உட்பட அனைவரும் ரஃபேல் ஊழலில் நேர்மையான, தெளிவான, அதிகார தலையீடு இல்லாத, நாடாளுமன்றக் குழு விசாரணையை அரசு அமைப்பதற்கு வலியுறுத்த வேண்டும்.
அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். நாம் நிறுத்தக் கூடாது. ரஃபேல் ஊழல் வெளிவரும் வரை நாம் நிறுத்தப்படாமல், தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
பிராந்திய வாக்காளரை பாதிக்கும் விவகாரங்களை குறிப்பிட்ட மாநிலங்கள் கண்டறிந்து மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வெளிக்கொண்டுவர வையுங்கள்" என்றார்.
மாநிலங்கள் அளவில் கட்சியில் இருந்து வந்த விரிசல்கள் காரணமாக கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியினால் மிகப் பெரிய அளவில் போராட்டம் போன்ற செயல்களை பெரிதளவு வெளிக்கொண்டு வர முடியவில்லை. இது சரிசெய்யப்பட்டு வருவதாக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.