திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு நோக்கி பாஜகவினர் பேரணியாகச் சென்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள மாநில அரசு தீவிரமாக களம் இறங்கியது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
கேரள அரசுக்கு எதிராக பா.ஜனதாவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு நோக்கி பாஜகவினர் பேரணியாகச் சென்றனர்.
பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது தடுப்பை உடைத்து உள்ளே செல்ல அவர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பா.ஜனதவினரை விரட்டினர்.
இச்சம்பவத்தினால் அங்கு பரபரப்பு நிலவியது.