புலந்த்சாஹர் வன்முறைச் சம்பவம்: காவல் ஆய்வாளரைச் சுட்டதாக ராணுவ வீரர் கைது 

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில், காவல் ஆய்வாளர் சுபோத் சிங் சுடப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிள்ளார். 
புலந்த்சாஹர் வன்முறைச் சம்பவம்: காவல் ஆய்வாளரைச் சுட்டதாக ராணுவ வீரர் கைது 
Published on
Updated on
1 min read

புலந்த்சாஹர்: உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில், காவல் ஆய்வாளர் சுபோத் சிங் சுடப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹர் மாவட்டத்தில் நிகழ்ந்த பசு வதை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 3-ஆம் தேதி ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்தச் சென்ற காவல் துறை ஆய்வாளர் சுபோத் சிங்கை வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கடுமையாக தாக்கியது. 

காயமடைந்த அவரை காரில் ஏற்றிச் சென்ற போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் சுபோத் சிங் உள்பட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார்.

 அதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு, காவல்துறை புலனாய்வுப் பிரிவு கூடுதல் இயக்குநர், மாஜிஸ்திரேட் ஆகிய மூன்று தரப்பினரும் தனித்தனியே விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது.

புலந்த்சாஹர் வன்முறை தொடர்பாக இதுவரை 9 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட பஜ்ரங் தளத்தின் மாவட்ட அமைப்பாளர்  யோகேஷ் ராஜ் தலைமறைவாக உள்ளார்.

தலைமறைவாகி உள்ள யோகேஷ் ராஜ் வெளியிட்ட விடியோவில் ராணுவ வீரர் ஜிதேந்திர மாலிக் என்கின்ற ஜீது ஃபெளஜி, துப்பாக்கியால் காவல் துறை ஆய்வாளரை சுடுவது போன்ற காட்சி இருந்ததை அடுத்து, விடியோ குறித்து ராணுவத்துக்கு உத்தரப் பிரதேச காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். 

அதையடுத்து சோஃபோர் பகுதியில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையில் இருந்த அவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.

காஷ்மீரில் 22 ராஷ்ட்ரிய ரைபிள் பட்டாலியன் பிரிவில் ஜவானாக இருக்கும் ஜிதேந்திர மாலிக், 15 நாட்கள் விடுமுறையில் புலந்த்ஷெஹர் நகருக்கு வந்துள்ளார். அங்கு பசு வதை தொடர்பாக நடந்த கலவரத்தில் பங்கேற்று துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com