காங்கிரஸ் ஆட்சியில்தான் ராணுவ தளவாட கொள்முதலில் வெளிநாட்டு இடைத்தரகர்கள்: மோடி  குற்றச்சாட்டு 

காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் ராணுவ தளவாட கொள்முதலின் போது வெளிநாட்டு இடைத்தரகர்கள் உள்ளே நுழைந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 
காங்கிரஸ் ஆட்சியில்தான் ராணுவ தளவாட கொள்முதலில் வெளிநாட்டு இடைத்தரகர்கள்: மோடி  குற்றச்சாட்டு 
Updated on
1 min read

லக்னௌ: காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் ராணுவ தளவாட கொள்முதலின் போது வெளிநாட்டு இடைத்தரகர்கள் உள்ளே நுழைந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி இன்று தனது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அங்கு ரேபரேலி-பான்டா நான்குவழி நெடுஞ்சாலையை திறந்து வைத்ததுடன் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அத்துடன் ரேபரேலியில் உள்ள ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட 900-வது ‘ஹம்சபர்’ ரெயில் பெட்டியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் மோடியுடன், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் கலந்து கொண்டார்.

பின்னர் அங்குள்ள மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி கூறியதாவது:

இத்தனை ஆண்டுகால ஆட்சியில் ரேபரேலியின் வளர்ச்சிக்காக முந்தைய காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை. தற்போது ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசார், நமது நாட்டு ராணுவ அமைச்சர் சொல்வதை நம்பவில்லை. விமானப்படை உயரதிகாரிகள் கூறியதையும் நம்பவில்லை. அத்துடன் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சொன்னதையும் நம்பவில்லை. தற்போது இவ்வைகரத்தில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றத்தைக் கூட குறை கூறும் அளவுக்கு அவர்கள் தயாராகி விட்டனர் 

கார்கில் போருக்கு பின்னர் நமது விமானப்படையை அதிநவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதற்காக ஒன்றுமே செய்யவில்லை. பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் இத்தகைய மெத்தனப்போக்கான அணுகுமுறையை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. 

சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சி செய்த போது ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கிய போதெல்லாம், அந்த ஒப்பந்த விஷயத்தில் வெளிநாட்டு இடைத்தரகர்கள் நுழைக்கப்பட்டனர். 

அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் தலைமறைவாக இருந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை நாங்கள் துபாயில் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்தோம். ஆனால், அவருக்காக வாதாடுவதற்காக காங்கிரஸ் கட்சி அவசர அவசரமாக தங்களது வக்கீலை ஏற்பாடு செய்து தந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com