புது தில்லி: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சரணடைய கால அவகாசம் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார்.
சீக்கியக் கலவர வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு, தில்லி உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் சரணடைய அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கின் தீர்ப்பு வெளியானதையடுத்து, பாஜக உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி வந்த நிலையில், சஜ்ஜன் குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பாதுகாவலர்கள் இருவரும் சீக்கியர்கள் என்பதால், தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
அதில், தில்லியின் ராஜ்நகர் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
மேலும், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் பல்வான் கோகர், முன்னாள் கடற்படை அதிகாரி கேப்டன் பக்மால் உள்பட 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனைகளையும் தில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
சஜ்ஜன் குமார் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.