பெங்களூரு: முதலில் லோக்பால் அமைப்பினை உருவாக்கி விட்டு பிறகு ஊழல் ஒழிப்பை பற்றி பேசுங்கள் என்பது உள்ளிட்ட நான்கு சவால்களை பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் அதற்கு முன்னோட்டமாக இரு தேசிய கட்சிகளும் பிரசாரத்திலிறங்கி விட்டன. திங்களன்று பெங்களூரு நகரில் நடந்த பிரமாண்ட பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்பொழுது அவர் கர்நாடக காங்கிரஸ் அரசை ஊழலில் திளைக்கும் அரசு என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு நான்கு சவால்களை எழுப்பியுள்ளார். அவையாவன:
நீங்கள் ஊழல் குறித்து பேசுவது மகிழ்ச்சி. ஆனால் ஊழல் குறித்து பேசுவதற்கு முன் சில சவால்களை உங்கள் முன் வைக்கிறேன்:
1. ஊழல் குறித்து நீங்கள் பேசுவதற்கு முன் முதலில் லோக்பால் அமைப்பை அமையுங்கள்.
2. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரணை செய்த சிபிஐ நீதிபதி லோயா மர்மமாக இறந்தது குறித்து முறையான விசாரணை நடத்துங்கள்.
3. உங்கள் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா வின் சொத்துக்களின் அபார வளர்ச்சி அடைந்தது குறித்து விசாரியுங்கள்.
4. முக்கியமாக கர்நாடக மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக ஊழல் கறைபடியாத ஒருவரை நியமியுங்கள்.
இவ்வாறு சித்தராமையா கேள்விகளை எழுப்பியுள்ளார்.