ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் புதன்கிழமை விதிக்கப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. அதற்காக சில ஆதாயங்களை அவர் பெற்றதாகவும் புகார்கள் உள்ளன.

இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்திராணி முகர்ஜியை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. 

இதையடுத்து இந்திராணி முகர்ஜியை 2 நாள்கள் சிபிஐ காவலுக்கு அனுப்ப சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா பிப்ரவரி 5-ந் தேதி அனுமதியளித்தார். இவ்விசாரணைக்குப் பின்னர் புதன்கிழமை (பிப்.7) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 

சொந்த மகள் ஷீனா போராவைக் கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தற்போது விசாரணைக் கைதியாக பைகுல்லா சிறையில் இந்திராணி அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com