

வங்கி கடன் ஏய்ப்பு மோசடியில் சிக்கியுள்ள தொழிலதிபர்கள் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான ரூ.94.52 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். அதேபோன்று பல கோடி ரூபாய் மதிப்புடைய அவர்களது 9 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.11,400 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய நீரவ் மோடியின் உறவினர் மெஹல் சோக்ஸியும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக அவர்கள் இருவருக்கும் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
அதேபோன்று, சோக்ஸி மற்றும் நீரவ் மோடிக்குச் சொந்தமான நிறுவனங்களின் ரூ.94.52 கோடி மதிப்புடைய பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) மற்றும் பங்குகளையும் அவர்கள் முடக்கியுள்ளனர். மேலும், ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, ஹோண்டா, இன்னோவா உள்ளிட்ட 9 சொகுசு கார்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பான தகவல்களை அமலாக்கத் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.