
புதுதில்லி: வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாக ஆரஞ்சு வண்ணத்துடன், இறுதி பக்கத்தில் முகவரி விபரங்கள் இல்லாத புதிய பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை இந்தியாவில் மூன்று நிறங்களில் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணி அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அரசு பணிக்காக செல்பவர்களுக்கு வெள்ளை நிறத்திலான பாஸ்போர்ட்டும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட்டும், பொது மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட்டும் வழங்கப்படுகிறது.
தற்பொழுது இந்திய வெளியுறவுத்துறை நீல நிற பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமலும், பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றி வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2012-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அனைத்தும் அரசு கணினித் தகவல் தரவில் சேமிக்கப்பட்டு உள்ளது, எனவே சோதனையின் போது ‘பார்கோர்டை ஸ்கேன்’ செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும் எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல இப்போது நீல நிறத்தில் வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறத்தினை ஆரஞ்சு நிறமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவல்களை வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு கொள்கை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை துணை செயலாளர் சுரேந்தர் குமார் தெரிவித்துள்ளதாக ஆங்கிலப் பத்திரிக்கை செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.