இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தாஜ்மஹால் வளாக மசூதிக்குள் தொழுகை நடத்தக் கட்டுப்பாடு: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

தாஜ்மஹால் வளாகத்துக்குள் அமைந்துள்ள மசூதிக்குள் ஆக்ராவைச் சாராதவர்கள் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:23 pm

DIN

தாஜ்மஹால் வளாகத்துக்குள் அமைந்துள்ள மசூதிக்குள் ஆக்ராவைச் சாராதவர்கள் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டியது அனைவரது கடமை என்றும், பாரம்பரியமிக்க அக்கட்டடம் அழிந்து போவதை விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹால், முகலாயர்களின் கட்டடக் கலையைப் பறைசாற்றுவதோடு மட்டுமன்றி இந்தியாவின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. அதனைப் பார்வையிட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். மேலும், தாஜ்மாஹால் வளாகத்துக்குள் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமைதோறும் தொழுகை நடத்த உள்ளூர் மட்டுமன்றி வெளியூரில் இருந்தும் முஸ்லிம்கள் வருகின்றனர்.
இந்நிலையில், அதன் பாதுகாப்பை உறுதிசெய்யும்பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி ஆக்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மசூதிக்குள் ஆக்ராவைச் சாராதவர்கள் சென்று தொழுகை நடத்தத் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மசூதிக்குள் தொழுகை நடத்தினால் பாதிப்பு ஏற்படும் என்றால் லட்சக்கணக்கானோர் தாஜ்மஹாலைப் பார்வையிட வரும்போது பாதிப்பு ஏற்படாதா? என அதில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு, திங்கள்கிழமை அதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்தது. 
ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பாதுகாக்க வேண்டும் என்று அப்போது தெரிவித்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.