திருவனந்தபுரம்: இந்து மதத்தில் தலிபானியத்தை உருவாக்கி விட்டதா பாஜக என காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
காங்கிரசைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர். இவர் கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது, "பாஜக 2019-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை 'இந்து பாகிஸ்தான்' ஆக்கி விடும்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு பாஜகவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது.
அதற்கு எதிர்வினையாக திங்களன்று பாஜகவின் 'யுவ மோர்ச்சா' அமைப்பினர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியதாக சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தனக்கு எதிராக அவதூறு கோஷங்கள் எழுப்பப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்து மதத்தில் தலிபானியத்தை உருவாக்கி விட்டதா பாஜக என சசி தரூர் பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது அவர் கூறியதாவது:
அவர்கள் என்னை பாகிஸ்தானுக்கு போகச் சொல்கிறார்கள். நானும் அவர்களைப் போன்ற ஹிந்து இல்லை என்றும், இந்த நாட்டில் வாழும் உரிமை எனக்கு இல்லை என்றும் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது? இந்து மதத்தில் தலிபானியத்தை உருவாக்கி விட்டதா என்ன பாஜக?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.