/

ராஜஸ்தானில் பசு கடத்தல்காரர் என்று எண்ணி இளைஞரை அடித்துக் கொன்ற மூவர் கைது 

ராஜஸ்தானில் பசு கடத்தலில் ஈடுபடுகிறார் என்று எண்ணி வாலிபர் ஒருவரை அடித்துக் கொன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:18 pm

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பசு கடத்தலில் ஈடுபடுகிறார் என்று எண்ணி வாலிபர் ஒருவரை அடித்துக் கொன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பரான அஸ்லாம் என்பவருடன் சேர்ந்து இரண்டு பசுக்களை தனது சொந்த ஊரான அல்வார் அருகேயுள்ள லாலாவாண்டி காட்டுப் பகுதி வழியாக வெள்ளிக்கிழமை அன்று இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக எண்ணிய அங்கிருந்த பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் இருவரையும் வழி மறித்து கடுமையாகத் தாக்கினர். அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரை அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.

இதில் படுகாயம் அடைந்த அக்பர் கானை சிலர் மீட்டு அருகில் உள்ள ராம்கார் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த படுகொலை தொடர்பாக ராம்கார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூவரை கைது செய்துள்ளது. 

இந்த சம்பவத்துக்கு மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை அடித்துக் கொலை செய்யும் சம்பவங்களை, அண்மையில்தான் கடுமையாக கண்டித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.