வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் 8 ஆயிரம் இந்தியர்கள், சரணடைந்த 3 ஆயிரம் நக்ஸல்கள்!

அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் 8 ஆயிரம் இந்தியர்கள், சரணடைந்த 3 ஆயிரம் நக்ஸல்கள்!
Published on
Updated on
1 min read

அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது அண்டை நாடுகளில் தஞ்சம் கோரும் இந்தியர்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது:

ஜூலை 16-ஆம் தேதி வரையிலான அடிப்படையில் மொத்தம் 8,363 இந்தியர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் 8 ஆயிரம் பேர் ஜெர்மனியில் தஞ்சம் கேட்டு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் யாரும் அந்நாட்டு அரசால் கைது செய்யப்படவில்லை. 359 பேர் அமெரிக்காவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனனர். டென்மார்க்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசில் சிறையில் இருவர் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றும் ஒருவர் ஃபின்லாந்தில் உள்ளார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இவர்கள் அனைவரின் ஆதாரங்களும் சரிபார்க்குமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். 

மேலும் சிபிஐ அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 23 பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இவர்களில் கடந்த 3 ஆண்டுகளில் வங்கி மோசடிகளில் ஈடுபட்ட நிரவ் மோடி, மெஹூல் சோக்ஸி மற்றும் விஜய் மல்லையா போன்றவர்களும், கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளும் உள்ளனர் என்றார்.

அதுபோல கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான நக்ஸல்கள் சரணடைந்துள்ளதாக மற்றொரு விவாதத்தின் போது மத்திய இணையமைச்சர் அனந்த் குமார் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்களில் அடிப்படையில் நக்ஸல்கள் அமைப்புகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் 3,714 பேர் சரணடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தொழிற்கல்வி பயில்வதற்கு தேவையான அடிப்படை கல்வி இல்லை. இருப்பினும் அவற்றில் தளர்வு ஏற்படுத்தி சரணடைந்தவர்களுக்கு தொழிற்கல்வி ஏற்படுத்தித்தர அரசு அனுமதித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com