கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை செவ்வாய்கிழமை அறிக்கை வெளியிட்டது.
திமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைபாடு காரணமாக சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் முன்னதாக 3 அறிக்கைகள் வெளியிடப்பட்டது. முதல் 2 அறிக்கைகளில், "கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக" தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட 3-ஆவது அறிக்கையில், "கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதன்பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர மருத்துவ சிகிச்சையினால், மருத்துவ உதவிகளுடன் நலமாக உள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை ஸ்டாலின் பேட்டியளிக்கையில், "ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கையின்படி கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது" என்றார்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அந்த புகைப்படம் திமுக சார்பில் மாலை வெளியிடப்பட்டது.
இதனால், திமுக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, தற்போது காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
"திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக 28/07/2018 அன்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
28/07/2018 அன்று மூச்சுத் திணறால் அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பிறகு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு அவர் நன்கு ஒத்துழைத்தார்த இதையடுத்து, அவருடைய உடல் நிலை சீரான நிலை திரும்பியது.
இருப்பினும், வயது மூப்பு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சீரான நிலையிலேயே உள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை, திமுக தொண்டர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.