
புதுதில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பைத் தாங்கிய மத்திய அரசிதழின் நகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்குவதற்கான செயல் திட்டத்தினை, மத்திய அரசு கடந்த மாதம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
இந்த திட்டத்தினை செயல்படுத்தும் அறிவிப்பினை பருவ மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அப்போது தெரிவித்திருந்தது.
வெள்ளியன்று மாலை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, மத்திய நீர்வளத்துறை செயலர் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினை மத்திய அரசிதழில் வெளியிடும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்றும், வெளியிட்டு தகவல் தெரிவிக்குமாறு மத்திய அச்சகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பைத் தாங்கிய மத்திய அரசிதழின் நகல் தற்பொழுது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாடானது தற்பொழுது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.