கர்நாடகத்தில் ஜெய நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளரை மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சி வாபஸ் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இந்த முடிவை மஜத எடுத்துள்ளது.
கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத-வை காங்கிரஸ் ஆதரித்தது. இதையடுத்து, மஜத மாநிலத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார்.
முன்னதாக, ஜெய நகர் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் விஜய்குமார் தேர்தலுக்கு முன்பு மரணமடைந்துவிட்டதால் அத்தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 11-ஆம் தேதி அத்தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இதையடுத்து, பாஜக சார்பில் விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்பு, காங்கிரஸும், மஜதவும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தி இருந்தன.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுடன் கூட்டணி அமைந்ததால், ஜெய நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில் தங்கள் வேட்பாளரை மஜத வாபஸ் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.