காஷ்மீரில் பிடிபி எனும் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பிடிபி-க்கு 28 சட்டப்பேரவை உறுப்பினர்களும், பாஜகவுக்கு 25 சட்டப்பேரவை உறுப்பினர்களும் இருந்தனர். இந்நிலையில், பாஜக பிடிபி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக இன்று(செவ்வாய்கிழமை) தெரிவித்தது.
இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வோஹ்ராவிடம் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மெஹபூபா முஃப்தி கூறியதாவது,
"ஆளுநரிடம் எனது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளேன். இனி யாருடனும் கூட்டணியை நீட்டிக்கப்போவதில்லை என்று ஆளுநரிடம் தெரிவித்துவிட்டேன். தொலை நோக்கு பார்வையுடனும், மக்கள் நலனுக்காகவும் தான் பாஜகவுடன் கூட்டணிவைத்தேன். ஆட்சி அதிகாரத்துக்காக பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. பாஜக ஆதரவை துண்டித்ததால் அதிர்ச்சியடைவில்லை. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் அங்கு ஆளுநர் ஆட்சி அமலாகவே பெரும்பாலான வாய்ப்பு உள்ளது.