பாஜக ஒரு பயங்கரவாத இயக்கம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:
பாஜக-வைப் போன்று நாங்கள் ஒன்றும் பயங்கரவாத இயக்கம் அல்ல, பாஜக-தான் பயங்கரவாத இயக்கம். ஏனெனில் அவர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் வன்முறையைத் தூண்டவில்லை. மாறாக ஹிந்துக்களுக்கு மத்தியிலும் வன்முறையை ஏற்படுத்துகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக, மே 30-ஆம் தேதி பாஜக தொண்டர் திரிலோச்சன் மஹோத் மற்றும் ஜூன் 2-ஆம் தேதி பாஜக தொண்டர் துலால் குமார் ஆகியோர் மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தின் பலராம்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ள மரம் மற்றும் கம்பத்தில் தூக்கிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதுபோல திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்தப் படுகொலைகளுக்கு பாஜக தான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால் அதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.