மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.1.70 கோடி லஞ்சம் பெற முயன்ற வழக்கில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர், உதவி ஆணையர் ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு குறித்து சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவினர் (ஏசிபி) கூறியதாவது:
கடந்த 2010-ஆம் ஆண்டு தாணேவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் அளித்த புகாரின்படி, தாணே வருமான வரித்துறை அலுவலகத்தின் கூடுதல் ஆணையர் சுமித்ரா பானர்ஜி (49), உதவி ஆணையர் அஞ்சலி பம்போலே (50) ஆகியோர் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டு அந்த நிறுவனத்தை மிரட்டியுள்ளனர்.
அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்த இருக்கும் கணக்கெடுப்புப் பணியை, தேடுதல் பணியாக மாற்றாமல் இருக்க இரு பெண் அதிகாரிகளும் லஞ்சம் கேட்டுள்ளனர். வருமான வரித்துறை தேடுதல் பணி மேற்கொள்ளும் பட்சத்தில், கணக்கில் வராத சொத்துகளை பறிமுதல் செய்யும் அதிகாரம் அத்துறைக்கு உள்ளது. எனவே, அதன் அடிப்படையில் அந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் சுமித்ரா பானர்ஜி தலைமையில் வருமான வரித்துறை கணக்கெடுப்புப் பணி மேற்கொண்டது. நிறுவனம் செலுத்த வேண்டிய வரி ரூ.25 கோடி இருக்கும் என்றும், தங்களுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தால் அந்த நடவடிக்கையை தவிர்த்துவிடுவதாகவும் அதிகாரிகளான சுமித்ரா, அஞ்சலி கூறியுள்ளனர்.
இந்நிலையில், அந்த நிறுவனம் அளித்த புகாரின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சுமித்ராவின் கணவர் சுப்ரதோ லஞ்சப் பணத்தை பெறும்போது பிடிபட்டார். அதைத் தொடர்ந்து சுமித்ரா பானர்ஜி, அவரது கணவர் சுபத்ரோ, அஞ்சலி பம்போலே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிபதி விவேக் கதாரே, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு புகார் கூறப்பட்ட சுமித்ரா, சுபத்ரோ, அஞ்சலி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அவர்களில் சுமித்ரா, அஞ்சலிக்கு 5 ஆண்டு சிறையும், சுமித்ராவின் கணவருக்கு 4 ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டது.
மேலும், சுமித்ராவுக்கு ரூ.80 லட்சம், அஞ்சலிக்கு ரூ.40 லட்சம், சுபத்ரோவுக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







