புதுதில்லி: காவிரி தீர்ப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு நான்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர்.
இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சங்க பிரதிநிதிகளுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்பட்டது. அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்பாசன அமைச்சரை சந்திக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது என்றும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தில்லியில் இன்று மத்திய நீர்பாசன துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் அளித்த தகவலில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மார்ச் 9-ல் 4 மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும், இந்த ஆலோசனை கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துவது பற்றியும் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.