

புதுதில்லி: இந்தியாவில் இடதுசாரிஅரசியல் என்பது ஏறக்குறைய மறக்கப்படும் நிலைக்குச் சென்று விட்டது என்று பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியினை பெற்றுள்ளது. குறிப்பாக திரிபுராவில் 25 ஆண்டு காலமாக இருந்து வந்த இடதுசாரி ஆட்சியினை முதன்முறையாக பாஜக கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தில்லியிலின்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் என்ன என்பது குறித்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரிபுரா மக்கள் மாற்றத்துக்காக ஏங்கி வந்தனர். அதன் காரணமாகவே 25 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த இடதுசாரிகளை புறந்தள்ளி விட்டு அவர்கள் ஒரு புதிய மாற்றத்தினை வரவேற்றுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிசத்தின் கோட்டையாக திரிபுரா விளங்கி வந்தது. நமக்கு கிடைத்திருப்பது சித்தாந்த ரீதியான வெற்றி. இடதுசாரிகளின் அரசியல் என்பது வன்முறையும் வெறுப்பும் நிரம்பியது. அதன் காரணமாகவே மக்கள் எல்லா இடத்திலும் அதனை நிராகரித்து விட்டார்கள்.
உலகம் முழுவதும் முடிந்து போய் விட்ட இடதுசாரிஅரசியல் தற்பொழுது இந்தியாவில் ஏறக்குறைய மறக்கப்படும் நிலைக்குச் சென்று விட்டது.
திரிபுரா உள்ளிட்ட மூன்று வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் இனி மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தும். வளர்ச்சியினைப் பொறுத்தவரை எல்லா மாநிலங்களும் சரி சமம்.
அடுத்து கர்நாடக தேர்தல் வரவுள்ளது. நமது இந்த வெற்றிப் பயணம் தொடர கடுமையாக உழைக்க வேண்டும். நமக்கு இப்பொழுது நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு நிரம்பிய ஒரு சூழல் நிலவுகிறது.
இவ்வாறு மோடி பேசியதாக அமைச்சர் அனந்த குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.