பலியா: வாங்கிய கடனுக்கான வட்டியைச் செலுத்தவில்லை என்பதற்காக தலித் பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் உள்ளது ஜஜவுலி என்னும் கிராமம். இங்கு ரேஷ்மா (45) என்னும் தலித் சமூகத்தினை சேர்ந்த பெண் வசித்து வந்தார். இவர் அதே கிராமத்தினைச் சேர்ந்த சோனு சிங் மற்றும் சித்து சிங் ஆகிய இருவரிடம் இருந்து ரூ.20000 கடனாகப் பெற்றுள்ளார்.
குறிப்பிட்ட அவகாசத்தில் அவர் கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்தி விட்ட பின்னும், அவர்களிருவரும் தொடர்ந்து வட்டி கேட்டு ரேஷ்மாவை தொல்லை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வியாழன் இரவு ரேஷ்மா தனது வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த சோனு சிங் மற்றும் சித்து சிங் ஆகிய இருவரும், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டனர்.
ரேஷ்மாவின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை சீராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரேஷ்மா மருத்துவமனையில் நீதிபதி ஒருவரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் சோனு சிங் மற்றும் சித்து சிங் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவல்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனில் குமார் சிங் தெரிவித்தார்.