பெங்களூர்: ஓலா செல்போன் செயலியில் இருக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பெங்களூருவில் இருந்து தென்கொரியாவுக்கு செல்ல இளைஞர் ஒருவர் கார் புக் செய்திருப்பது செய்தியாகியுள்ளது.
ஓலா போன்ற செயலியின் அடிப்படையில் இயங்கும் கார் சேவையில், சில சமயங்களில் வெளிநாடுகளுக்கு கார் புக் செய்து டிவிட்டர் மற்றும் சமூக தளங்களில் பொதுமக்கள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த பிரஷாந்த் ஷாஹி என்ற மாணவர், பெங்களூருவில் இருந்து தென்கொரியாவுக்கு செல்ல காரை முன்பதிவு செய்துள்ளார். கோரிக்கை ஏற்கப்பட்டு கார் ஓட்டுநரின் செல்போன் எண், காரின் விவரம் அளிக்கப்பட்டதோடு, இந்த பயணத்துக்கு தோராய கட்டணமாக ரூ.1.4 லட்சம் கட்டணம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூர் - தென்கொரியா இடையே 13,840 கி.மீ. தொலைவு கொண்ட இந்த பயணத்துக்கு 5 நாட்கள் ஆகும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அடங்கிய புகைப்படத்தை ஷாஹி டிவிட்டரில் பகிர அது வைரலாகிவிட்டது.
இதற்கு ஓலா தரப்பில், வெளிநாடுகளுக்குச் செல்ல பயணிகள் விமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரஷாந்த் கூறுகையில், கூகுள் ஆப்புக்குச் செல்வதற்கு பதில் ஓலா ஆப்புக்குச் சென்றேன். அங்கு தென் கொரியா என்று போட்டதும் வந்துவிட்டது. சரி விளையாட்டாக காரை முன்பதிவு செய்து பார்த்தேன். அதுவும் முன்பதிவாகி தகவலும் கிடைத்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.