

காக்கிநாடா: வயிற்றில் இருக்கும் 25 கிலோ கட்டியால் ஏற்படும் அதீத வலியுடன் தன்னால் வாழ முடியவில்லை என்றும், தன்னை கருணைக் கொலை செய்யுமாறும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மிஷ்ராவிடம் இது குறித்து 37 வயதாகும் பட்டி ராமலஷ்மியின் கணவர் கோண்டா பாபு நேற்று மனு அளித்தார்.
குறை தீர் முகாமுக்கு தனது கணவருடன் ஆட்டோவில் வந்த பட்டி ராமலஷ்மியால் ஆட்டோவில் இருந்து இறங்க முடியாததால், அவர் சார்பில் மனுவை ஆட்சியரிடம் கோண்டா பாபு வழங்கினார்.
தனது வயிற்றில் வளரும் கட்டியை அகற்ற ரூ.4.5 லட்சம் செலவாகும். அதனை செலுத்த தன்னிடம் பணமில்லாததால், தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியர், என்டிஆர் ஆரோக்யா ஸ்ரீ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்து, அப்பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். தம்பதியர் நம்பிக்கையை இழந்து விட வேண்டாம் என்றும், அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற தனது அதிகாரத்துக்கு உட்பட்டு எந்த விதமான உதவிகளை செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
நாளுக்கு நாள் வலி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கட்டி வளர்வதால் என்னால் அசையக் கூட முடியவில்லை. எனவேதான் கருணைக் கொலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன் என்கிறார் பட்டி ராமலஷ்மி கண்ணீரோடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.