புதுதில்லி: உத்தரப்பிரதேசத்தில் 2012-ஆம் ஆண்டு தேசிய கட்சி ஒன்றுக்காக ஜாதி ரீதியான வாக்காளர் ஆய்வில் ஈடுபட்டதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவன முன்னாள் ஊழியர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் பயனாளர்கள் குறித்த தகவல் திருட்டில் ஈடுபட்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்த 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' என்னும் தகவல் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்படி திருடப்பட்ட தகவல்களின் மூலம் தேர்தல் முடிவுகளை மறைமுகமாகத் தீர்மானிக்கும் வேலையிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே இந்திய அரசியல் கட்சிகளும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா சேவையினை பயன்படுத்தியது தொடர்பான தகவல் வெளியாகியது. இதன் காரணமாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மோதல் போக்கு காணப்படுகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 2012-ஆம் ஆண்டு தேசிய கட்சி ஒன்றுக்காக ஜாதி ரீதியான வாக்காளர் ஆய்வில் ஈடுபட்டதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவன முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவு செய்திருப்பதாவது:
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் தலைமை நிறுவனமாக ஸ்ட்ராட்டஜிக் கம்யூனிகேஷன் லேபாரட்டரிஸ் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் யாருடன் இருந்தது என்பது தொடர்பாக கேள்விகளை இந்திய செய்தியாளர்கள் எழுப்பி வருகின்றனர். அது தொடர்பான விளக்கம்தான் இது:
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின் தலைமை நிறுவனமான எஸ்சிஎல் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒன்றுக்கும் அதிகமான முறை சாதி ரீதியிலான ஆய்வுகள் நடத்தியுள்ளது.
2003-ம் ஆண்டில் இருந்து கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமில்லை, பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக பணியாற்றி உள்ளது.
தேசிய கட்சி ஒன்றின் சார்பில் 2012-ஆம் ஆண்டு தேசிய கட்சி ஒன்றுக்காக உத்தரப்பிரதேசத்தில் ஜாதி ரீதியான வாக்காளர் ஆய்வில் ஈடுபட்டது. கட்சியின் முக்கிய வாக்காளர்கள் மற்றும் பிற வாக்காளர்களை அடையாளப்படுத்துதல் பற்றிய முடிவுகளுக்கு இந்த ஆய்வு வழிவகுத்தது.
அவர் ட்விட்டரில் இணைத்துள்ள ஆவணத்தில் ஜக்கிய ஜனதா தளம் கட்சியின் பெயர் மட்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2010 தேர்தல் வியூகத்திற்காக அக்கட்சிக்காக பணியாற்றியதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்போது நடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 2009 பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுக்காக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.முன்னதாக 2007-ம் ஆண்டு உத்தரபிரதேசம், கேரளா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் பல்வேறு வகையான அரசியல் ஆய்வுகள் மேற்கொள்ள பணிகள் வழங்கப்பட்டது என்று அவர் வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.